Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
Follow Us: info@tnspi.org +91 99944 54417
பிரச்சினை தெரிவிக்க
← TNSPI VOICE

குமரி மாவட்டத்தில் முடங்கிய நிலையில் தானியங்கி வானிலை நிலையங்கள் – சமூக பொதுநல இயக்கம் புகார்.

குமரி மாவட்டத்தில் செயல்படாமல் இருக்கும் தானியங்கி வானிலை நிலையம்

தானியங்கி வானிலை நிலையங்கள் (Automatic weather Stations) மனித தலையீடு இல்லாமல் பல்வேறு வானிலை அளவுகளை சேகரித்து பதிவு செய்து தொலைதூர கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும் அமைப்புகள் ஆகும். இவை இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) மற்றும் மாநில அரசுகளால் பரவலாக நிறுவப்பட்டு உள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் வெள்ளம், கனமழை, வறட்சி போன்றவற்றை கண்காணிக்க இயலும். இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரியில் வானிலை அவதானிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வானிலை ஆராய்ச்சி துறை மூலமாக குமரி மாவட்டத்தில் திருவட்டார், தக்கலை, முஞ்சிறை, கிள்ளியூர், மேல்புறம், தோவாளை, ராஜாக்கமங்கலம், குருந்தன்கோடு ஒன்றியப் பகுதிகளில் தானியங்கி வானிலை நிலையங்கள் (AWS) அமைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இவற்றின் மூலம் வெப்பநிலை, ஈரப்பதம், காற்று வேகம், மழை அளவு, வளிமண்டல அழுத்தம்/சூரிய கதிர்வீச்சு, மண் ஈரபதம், மின்கடத்துதிறன், PH அளவு, உள்ளிட்ட பல்வேறு நிலவரங்களை தெரிந்து கொள்ள உதவும்.

இந்நிலையில் குறிப்பிட்ட தானியங்கி வானிலை நிலையங்கள் அனைத்தும் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக செயல்படாமல் முடங்கிய நிலையில் உள்ளன. குறிப்பிட்ட தகவலை தெரிவிக்கும் இணைய பக்கம் குறிப்பிட்ட தரவுகள் எதுவும் வராத நிலையில் பதிவு செய்யப்படாமல் காட்சி அளிக்கிறது. இதனால் விவசாயிகள் வானிலை நிலவரம், மழை அளவு, ஈரபதம், வெப்பநிலை உள்ளிட்ட நிலவரங்களை தெரிந்து கொள்ள இயலாத நிலையில் தவித்து வருகின்றனர்.

வெள்ளம், புயல், வெப்ப அலை உள்ளிட்ட காலநிலைகளை முன் எச்சரிக்கை செய்து மக்கள் உரிய ஏற்பாடுகளை செய்து கொள்ளவும், தங்களை, விவசாயத்தை பேரழிவுகளில் இருந்து பாதுகாத்திடும் வகையில் உருவாக்கப்பட்ட இத்தகைய வானிலை ஆய்வு நிலையங்கள் கவனிப்பாரின்றி கண்டு கொள்ளப்படாமல் குமரி மாவட்டத்தில் காட்சிப் பொருளாக காட்சி அளிக்கின்றன. எனவே விவசாயிகள் மற்றும் மக்கள் நலன் கருதி இவற்றை செயல்படுத்திட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் துணை பொது செயலாளர் M அல்அமீன்ஷாகுல் ஹமீது, தென்மண்டலச் செயலாளர் ஞாலம் T.ஜெகதீஷ், குமரி கோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி, செயலாளர் P.சந்திரா, தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் E.சுரேஷ், விவசாய அணி தலைவர் N.கிருஷ்ணன், செயலாளர் L. வேதக் கண, தக்கலை ஒன்றிய விவசாய அணிச் செயலாளர் A.கணபதி மற்றும் நிர்வாகிகள் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தின் போது குமரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.