சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
தமிழ்நாட்டில் நகர்புற வளர்ச்சி, மக்கள்தொகை பெருக்கம், தொழில்மயமாதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குப்பைக்கழிவுகள் அதிகரித்து இவை சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்கு விளைவிப்பதாக உருமாறி வருகிறது. தமிழகத்தில் தினசரி சுமார் 16,500 டன் திடக்கழிவு உருவாகிறது. இதில் சென்னையில் மட்டுமே தினசரி சுமார் 6,150 டன் குப்பை உற்பத்தியாகி பெரும் சவாலாகவே உருமாறி உள்ளது. திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டப்படும் கழிவுகள் மக்கள் பாதிப்பு அடையும் நிலையில் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சேகரிக்கப்படும் குப்பைகள் திறந்தவெளியில் கொட்டப்படுவதால் இவை நீர், மண், காற்று மாசை உருவாக்குவதோடு பல தொற்றுநோய்களுக்கும் காரணமாகிறது.
இக் குப்பை ஒரு பிரச்னை அல்ல அது வருமானம் தரும் வளம் என்னும் வகையில் உயிரி எரிவாயு ஆலை (Bio-CNG) மூலம் பயன்படத்தக்க வகையில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. உயிர் மக்கும் விவசாய, உணவு, நகர, தாவர உள்ளிட்ட கழிவுகளின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பயோகேஸை சுத்திகரித்து உயர் மீத்தேன் அடங்கிய எரிபொருள் உருவாகிறது. இது எரிபொருளாக பயன்படுத்த முடிவதுடன் மீதமிருக்கும் உயிரியல் கழிவு உயர்தர இயற்கை உரமாக உள்ளது. இதன்மூலம் மாநிலத்தின் எரிசக்தி தேவையினை பூர்த்தி செய்ய இயல்வதுடன் ரசாயன உரங்களின் பயன்பாட்டையும் குறைக்க இயலும்.
குப்பைகள் பயன்பாடற்று தீங்கு விளைவிப்பது இதன்மூலம் தடுக்கப்படுவதோடு விவசாயிகளுக்கு கூடுதல் வருமானமும், புதிய தொழில் வாய்ப்புகளும் உருவாகும் நிலை உள்ளது. பசுமை எரிசக்தி துறையில் குஜராத் மாநிலம் முன்னோடியாக திகழும் நிலையில் தமிழ்நாடு இதற்கான முன்னெடுப்பை தீவிரபடுத்துவது மூலம் கார்பன் உமிழ்வு குறைவதோடு பசுமை இல்ல வாயுக்களின் தாக்கமும் கட்டுபடுத்தப்படும். நகரப்பகுதிகள் என இல்லாமல் கிராமங்கள் வரை தேங்கும் குப்பை மூலம் பிரச்னைகள் பூதாகரமானதாக உருவெடுத்து உள்ள சூழலில் இதனை அகற்ற முயன்றும் பல அவதாரம் எடுத்து மீண்டும் பாதிப்புகளை உருவாக்கியே வருகின்றன.
இதற்கு என பல கோடி ரூபாய் ஆண்டுகள் தோறும் அரசு செலவு செய்து வந்த போதிலும் தொடரும் குப்பைகளால் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தோல்விகளையே தழுவுகின்றன. அதிலும் நீர்நிலைகளில் சேகரமாகும் கழிவுகள் பல்வேறு வகையில் பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு மண்ணின் தன்மையினையும் மாற்றி நிலத்தடி நீர் ஆதாரத்தையும் பாழ்படுத்தி விடுகின்றன. இதனை முறியடிக்க உயிரி எரிவாயு ஆலை உருவாக்குவதே விமோசனமாக அமையும். இதன்மூலம் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்புகளையும் உருவாக்காமல் குப்பையினையும் செல்வமாக்கலாம்.
சென்னை சேத்துப்பட்டில் செயல்பட்டு வரும் உயிரி எரிவாயு ஆலையினை சமீபத்தில் தமிழக முதல்வர் பார்வையிட்டார். மக்கும் கழிவுகளை இயற்கை உரமாகவும், மக்காத கழிவுகளை சாலை அமைப்பு மற்றும் சிமெண்ட் ஆலைகளில் மாற்று எரிபொருளாக பயன்படுத்த நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அவர் ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் மட்டுமே இயங்கி வரும் இத்தகைய Bio-CNG ஆலை தமிழக அளவில் உள்ள குப்பை பிரச்னையினை தீர்த்து வைக்க இயலாது. இதுபோல் தமிழ்நாட்டில் அனைத்து உள்ளாட்சி பகுதிகளிலும் அமைக்கப்பட வேண்டும். இதன்மூலம் குப்பை என்பது கழிவு அல்ல அது பயன்படுத்தப்படாத வளம் என நிரூபித்திட முடியும்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.


