சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது –
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே வேடசந்தூர் பகுதில் உள்ள அரசு பள்ளியில் சுமார் 300 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் மாடியில் உள்ள குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்து உள்ளது தெரியவரவே இப்பகுதியில் ஆய்வு செய்த போது இதுபற்றி குறிப்பிட்டு எச்சரிக்கை துண்டு சீட்டையும் சமூக விரோதிகள் எழுதி வைத்து உள்ளது தெரியவந்து உள்ளது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் அளித்த புகாரை தொடர்ந்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தகைய சம்பவம் கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்துவதாக உள்ளது. இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்து கொள்கின்றோம்.
இது போன்ற சம்பவங்கள் கடந்த காலங்களில் அரங்கேறி சமூக பதற்றத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் பகுதியில் டிசம்பர் 2022 ல் குறிப்பிட்ட பிரிவு மக்கள் வசித்து வரும் பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது. இப்பகுதியை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து இப்பிரச்னை வெளி உலகிற்கு தெரிய வந்தது. இது தீண்டாமை பிரச்னையினை தீண்டுவதாக பெரும் பூகம்பமாய் நிலவியது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அமச்சியா புரம் பகுதியில் அக்டோபர் 2025ல் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது தெரியவந்தது. இதுபோலவே காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட சில பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து உள்ளது. இதன் தொடர்ச்சியாக திண்டுக்கல் மாவட்டத்திலும் விஷமிகள் சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு உள்ளனர். இதனால் உடல்நலம் பாதிப்பு மட்டுமில்லாமல் சமூக ஒற்றுமை சீர்குலைவு, உளவியல், சாதி பாகுபாடு உள்ளிட்ட பல பிரச்னைகளையும் உருவாக்குவதாக உள்ளது.
சமூகத்தில் பல அடுக்குகளில் இது தாக்கங்களை ஏற்படுத்துவதோடு பாதிக்கப்பட்ட மக்கள் ஒவ்வொரு முறையும் தண்ணீர் அருந்தும் போதும் மாசுபட்ட குடிநீரை குடிப்பதாக ஏற்படும் எண்ணம் நீண்டகால மன அழுத்தத்தையும், அவமான உணர்வையும் ஏற்படுத்துவதாக உள்ளது. இதனால் தங்கள் பகுதி சிறுமைப்படுத்தப்படுவதாக உணர்வதால் பல்வேறு வகையிலும் நெருக்குதல்களுக்கு மக்கள் உள்ளாகும் நிலையே உள்ளது.
சிலரது குறுகிய மனநிலை பிறழ்வான செயல்பாடுகளால் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பாதிப்பே ஏற்படுகிறது. மேலும் இது போன்ற செயல்கள் தொடராமல் தடுப்பதின் மூலமே சமூக ஒற்றுமையும், சமூகநீதியும் இருப்பதாக கருத முடியும். நாகரிக சமூகத்தில் இத்தகைய காட்டுமிரண்டித்தனமாக செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம். அய்யலூர் சம்பவத்தில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்வதோடு இனியும் இதுபோன்றொரு சம்பவம் தொடராமல் தடுத்திட அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.

