Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
Follow Us: info@tnspi.org +91 99944 54417
பிரச்சினை தெரிவிக்க
← TNSPI VOICE

விவசாயிகளின் உரிமையைப் பறிக்கும் விதை மசோதா- சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.

Social Welfare Movement's Protest Against the Seed Bill that Strips Farmers' Rights.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் சட்டமாக்கிடும் வகையில் வரைவு விதைசட்ட மசோதா 2025 (Draft Seeds Bill 2025) வினை அண்மையில் மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. இச்சட்டம் பொது சொத்தாக இருக்கும் விதைகளை நிறுவனமயகாக்கும் திட்டம். விதைகளின் தரத்தை கட்டுபடுத்துவதாக தெரிவித்தாலும் முழுக்க விவசாயிகளின் உரிமைகளை பறிப்பதாகவே உள்ளது. தாவரங்கள் மற்றும் விவசாயிகள் உரிமை பாதுகாப்பு சட்டம் 2001 விதைகளின் பாரம்பரிய உரிமைகளை பாதுகாக்கும் நிலையில் புதிய விதை சட்டத்திற்கான தேவை என்ன?

விதைகள் என்பது நமக்கான பேராயுதம் என்பார் நம்மாழ்வார். விதைகள் நமது வேளாண்மையின் இறையாண்மை. விதைகள் நமது வாழ்வின் பண்பாட்டு கூறு. இதுவரை விவசாயிகளின் ஏகபோக உரிமையாய் இருந்த விதைகள் கார்பரேட் நிறுவனங்களின் கைகளுக்கு தாரைவார்க்கிறது இச்சட்டம். சமூக சொத்தாக இருக்ககூடிய விதைகள் 1966 வரைவு சட்டம் எந்த வகையிலும் கட்டுபடுத்தவில்லை. ஆனால் புதிய சட்டம் அனைத்து வகையான விதைகளையும் பதிவு செய்திட கூறுகிறது.

விவசாயிகள் பயன்படுத்தும் பாரம்பரிய விதைகள் கூட கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும். மேலும் பதிவு செய்யப்பட்ட விதைகள் மட்டுமே வணிகத்திற்கு பயன்படுத்தபடவேண்டும் என சொல்கிறது. குறிப்பிட்ட நிறுவனங்கள் மூலமே நாம் விதைகள் வாங்க வேண்டியதை இச்சட்டம் உறுதி செய்கிறது. சுருங்கச் சொன்னால் பெருநிறுவனங்களிடம் விதைககளை ஒப்படைக்கிறது இச்சட்டம். BASF/ BAYER/DOW/Agro Sciences,/DUPONT/MON SANTO/ SYNGENTA இந்தியாவில் வேரூன்றி 65% விதைகளின் விற்பனையாளர்களாக உள்ளனர்.இந்நிறுவன விதைகளை பயன்படுத்துவோருக்கு எந்த பாதுகாப்பும், இழப்பீடும் கிடைக்காத நிலையே உள்ளது.

மரபணு மாற்றப்பட்ட பி.டி.பருத்தி விதைகளை பயிரிட்ட மகாராஷ்டிரா விவசாயிகள் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொண்டதை இந்திய குற்றபதிவு ஆவணமே அறிவித்து உள்ளது. குறிப்பிட்ட நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுக்க வேண்டும் எனில் அந்நிறுவனம் இயங்கும் நாட்டில்தான் வழக்கு பதிவு செய்ய முடியும். இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்படுகின்றனர். பன்னாட்டு கார்பரேட் நிறுவனங்கள் நலனிற்காக நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள் உயிரை பணயம் வைக்கிறது மத்திய அரசு.

இயற்கை விவசாயமே எனது தொலைநோக்கு திட்டம் என பிரதமர் கோவை மாநாட்டில் பேசினார். ஆனால் பாரம்பரிய ரகங்களை புறம்தள்ளி மரபணு திருத்தப்பட்ட ஜிஸிஸி தன் 100 மற்றும் புசா TST எனும் அரிசி ரகங்களை வெளியிடுகிறார். இதன்மூலம் அவரது சொல்லிற்கும், செயலிற்குமான இடைவெளியினை அறியலாம். இதுபோலவே விவசாயிகள் நண்பனாக தன்னை காட்டி கொண்டு கார்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு மேற்கொள்ளும் விவசாயிகள் விரோத நடவடிக்கை அவர்கள் மீதான தாக்குதலாக மட்டுமல்ல,விதை சுதந்திரத்தின் மீதான தாக்குதலாக பார்க்க முடிகிறது.நமது காப்புரிமை சட்டங்களை நீர்த்து போக செய்யும் புதிய விதைகள் மசோதாவினை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.