சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய மனோன்மணியம் பெ.சுந்தரம்பிள்ளை பெயரில் திருநெல்வேலியில் அமைந்து உள்ளது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம். 1891 ல்அவரது மனோன்மணியம் நாடகத்தில் உள்ள பாயிரப் பகுதியே நீராருங் கடலுடுத்த… என்ற பாடல் தமிழ்த்தாய் வாழ்த்தாக மாற்றப்பட்டது. 1970 முதல் தமிழகத்தில் அரசு விழாக்கள், கல்வி நிறுவனங்கள், பொதுத்துறை நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது வழக்கமாக உள்ளது.
தமிழக அரசு 2021ல் இதனை அதிகாரப்பூர்வ மாநிலப் பாடலாக அறிவித்தது. கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பொது நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் கட்டாயம் பாடவேண்டும் எனவும் இப்பாடலை பாடும் போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்நிலையில் வரும் 28ந் தேதி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 33வது பட்டமளிப்பு மளிப்பு விழா ஆளுனர். ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக் தலைமையில் நடைபெற உள்ளது.
இதையொட்டி பல்கலைக்கழக துணைவேந்தர் கே.சந்திரசேகர் தெரிவித்து உள்ள அறிவிப்பு தமிழர்கள் இதயத்தில் ஈட்டியால் குத்துவதைப் போல் உள்ளது. பல்கலைகழகத்தில் நடைபெறும் விழாவில் முதலில் வந்தேமாதரம், அடுத்து தேசிய கீதம், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என ராஜ்பவன் அறிவுறுத்தலின் படி தெரிவித்து உள்ளார். இது தமிழக மரபுக்கு முரணானது மட்டுமல்ல, மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுக்கும் எதிரானது. இத்தகைய நிலைப்பாட்டிற்கு கடும் கண்டனங்களை தெரிவிக்கின்றோம்.
மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவில் விழாக்களில் மாநிலப் பாடல் இருக்கும் பட்சத்தில் அதனை முதலாவது/பின்னர் வந்தே மாதரம், இறுதியில் தேசிய கீதம் பாடவேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. ஆனால் தமிழர்களின் மொழி, பண்பாட்டு அடையாளத்தை புறந்தள்ளும் நோக்கில் தமிழ்நாட்டு பெருமையினை உணர்த்தும் தமிழ்த்தாய் வாழ்த்தினை பின்தள்ளுவது தமிழர்களின் அடையாளத்தையும், மாநில உரிமைகளையும் பறிக்கும் செயலாகவே பார்க்கத் தோன்றுகிறது.
தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றியவரின் பெயரில் உள்ள பல்கலைகழகத்திலேயே இத்தகைய புறக்கணிப்பு அரங்கேறுவது ஏற்க கூடியது அல்ல. தமிழகத்தின் நீண்டகால மரபு, அரசின் உத்தரவு, மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தல் மற்றும் பல்கலைக்கழக வரலாற்று முக்கியத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவதே சரியானது. மாநில உரிமையினையும், தமிழின் மாண்பினையும் காக்கும் வகையில் இதனை தமிழ்நாடு அரசும், பல்கலைக்கழக நிர்வாகமும் உறுதி செய்திட வேண்டும்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.

