Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
Follow Us: info@tnspi.org +91 99944 54417
பிரச்சினை தெரிவிக்க
← TNSPI VOICE

ரேஷன்கடைகளில் பாக்கெட்டுகளில் அரிசி வழங்கும் திட்டத்தை அரசு முடக்கியது ஏன்? சமூக பொதுநல இயக்கம் கேள்வி.

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் பாக்கெட் அரிசி விநியோகம் திட்டம்

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-

தமிழ்நாட்டில் குடும்ப அட்டை மூலம் ரேஷன் கடைகள் வழியாக அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் இலவச மற்றும் மானிய விலையில் அரசால் வழங்கப்படுகிறது. இதன்படி 2 கோடியே 27 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். பொதுவழங்கல் முறையில் (PDS) ரேஷன் கடைகளுக்கு மூடைகளில் அரிசி கொண்டு வரப்பட்டு பின்னர் அளந்து மக்களுக்கு வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட கடைகளுக்கு வரும்வரையில் இத்தகைய அரிசி கசிவு, கடத்தல், சிந்துதல் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் விரயம் ஆவதுடன் முறைகேடுகளுக்கும் உள்ளாகின்றன.

Indian Council for Research on International Economic Relations(ICRIER) என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையின் படி 2022-23 நிதியாண்டில் தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் மூலம் வழங்கபட்ட அரிசியில் சுமார் 5.2 லட்சம் டன் (15.8%) கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் பொருளாதார இழப்பு அரிசியின் மதிப்பிட்டு விலை அடிப்படையில் ரூ 1900 கோடி ஆகும். இந்த இழப்பு ஏற்பட்ட அரிசி சுமார் 21.67 லட்சம் குடும்பங்களுக்கு ஒரு மாதம் வழங்ககூடிய அளவு ஆகும்.

தமிழக அரசு அரிசி கடத்தலை தடுக்க சிவில் சப்ளைஸ் சிஐடி என்ற பிரிவை தமிழக காவல்துறையில் செயல்படுத்தி வருகிறது.துல்லிய அளவை உறுதிபடுத்திடும் வகையில் POS (Point of Sale) கருவியுடன் மின்னணு தராசை இணைத்து பொருட்கள் வழங்கி வருகிறது. இருப்பினும் கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதும், மக்களுக்கு குறிப்பிட்ட அளவில் அரிசி வழங்குவதில் பின்னடைவும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

இத்தகைய சூழலையும், இழப்புகளையும் தவிர்க்கும் விதமாக ரேஷன் அரிசியினை பாக்கெட்டுகளில் வழங்குவதாக தமிழக நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கடந்த 2022ல் அறிவித்து இருந்தார். இதன்படி 2024 ஆகஸ்ட் மாதம் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நியாயவிலை கடைகளில் அரிசியை பாக்கெட்டுகளில் அடைத்து விநியோகம் செய்யும் திட்டம் தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக சேலம் மாவட்டத்தில் இது அறிமுகபடுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மாநில அளவில் இத்திட்டம் செயல்படுத்தபடும் என எதிர்பார்க்கபட்டது.

ஆனால் இத்திட்டம் தொடங்கிய வேகத்தில் முடக்கப்பட்டது. இத்திட்டம் நடைமுறைபடுத்தி இருந்தால் அரிசியின் தரம் உறுதி செய்யப்படுவதோடு அளவு துல்லியமாக இருக்கும். மக்கள் கொண்டு செல்வதற்கு எளிதாக இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக கசிவு மூலம் இழப்பு ஏற்படுவது தடுக்கப்படும். இத்திட்டம் செயல்படுத்தப்படாததால் அரிசி கடத்தல், கசிவு உள்ளிட்டவற்றால் இழப்பு ஏற்படுவதால் மக்கள் பாதிப்பு ஏற்படும் நிலையே நீடித்து வருகிறது. மக்களுக்கு உணவு பொருட்கள் உத்தரவாதத்துடன் குறிப்பிட்ட அளவில் கிடைப்பதற்கும், மக்கள் பணம் விரயம் ஆவதை தடுப்பதற்கும் இத்திட்டத்தினை அரசு செயல்படுத்திட வேண்டியது அவசியம்.