சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
அரசு மருத்துவமனைகள் இலவசமாக, தரமாக பரிசோதனைகள், அறுவை சிகிச்சை, மருந்துகள் வழங்கி வருவதால் ஏழை, எளிய மக்களுக்கு உயிர்காக்கும் தோழனாக திகழ்கின்றன. தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல இயலாத நிலையில் உள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து வருவதால் இந்தியாவிலேயே உள்நோயாளிகள் அதிகம் சிகிச்சை பெறும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. பொதுசுகாதாரத்தினை காப்பதில் முக்கிய பங்காற்றி வரும் இம்மருத்துவமனைகளின் தொடர் செயல்பாடுகளால் இதன் மீதான நம்பிக்கை சீர்குலையும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
பெரியகுளம் அரசு மருத்துவமனையில் மூக்கில் சதை வளர்ச்சி காரணமாக 14 வயது சிறுவன் நிவாஸ் குமார் அனுமதிக்கப்பட்டு இருந்தான்.அவனுக்கு சுவாச குழாய் வழியாக செலுத்த வேண்டிய டியூப் தவறுதலாக உணவு குழாய் வழியாக தவறுதலாக செலுத்தப்பட்டது. இதனால் நிலைமை மோசமாகி தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு 60 நாட்களுக்கு மேல் கோமாவில் இருந்து கடந்த 11ந்தேதி பரிதாபமாக இறந்து போனான். இதுபோல் கடந்த மே மாதம் திருச்சி அரசு மருத்துவமனையில் மூக்கு சவ்வு அறுவை சிகிச்சைக்கென அனுமதிக்கபட்ட செவிலிய மாணவி அறுவை சிகிச்சைக்காக அனஸ்தீசியா கொடுக்கும் போது இதய அடைப்பு ஏற்பட்டு இறந்து போனார்.
இராமனாதபுரத்தில் கடந்த ஜூன் மாதம் அரசுமருத்துவமனையில் மூக்கு அறுவை சிகிச்சையின் போது இதய அடைப்பு ஏற்பட்டு பெண் இறந்து போனார். இதுதொடர்பாக மருத்துவ பதிவுகளை கேட்டு நீதிமன்றத்தில் இறந்த பெண்ணின் கணவர் தொடுத்த வழக்கின்படி மருத்துவ பதிவுகளை வழங்கிட நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. திருச்சி அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்கு என சிகிச்சை பெற்று வந்த ஆலந்தூர் மூதாட்டி தமிழ் கொடி என்பவரது கால்விரலை எலி கடித்து குதறியது. இதுபோலவே மதுரை, தஞ்சாவூர், சிவகங்கை என தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அரசு மருத்துவமனையின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இவை தனிப்பட்ட சம்பவங்கள் அல்ல.. அரசு மருத்துவமனைகளில் நீண்டகாலமாக நிலவிவரும் சுகாதார சீர்கேடு, அலட்சியம், பராமரிப்பு குறைபாடு ஆகியவற்றின் அடையாளமாகவே பார்க்க வேண்டி உள்ளது.
அரசு மருத்துவமனைகளில் கவனக்குறைவு காரணமாக ஏற்படும் இறப்புகளும், பாதிப்புகளும் தொடர்கதையாகி வருகிறது. இதற்கு மருத்துவர்களின் தவறு மட்டும் காரணம் அல்ல,.பணியாளர் பற்றாக்குறை, உபகரணபராமரிப்பு குறைபாடு, அதிக நோயாளி சுமை, விசாரணை தாமதம் போன்ற அமைப்பு ரீதியான பிரச்னைகளும் முக்கிய பங்காற்றுகின்றன. இதனால் அரசு மருத்துவமனைகளின் அடிப்படை சுகாதாரம், பராமரிப்பு, நோயாளி பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பி உள்ளது. செவிலியர் பணி இடங்கள் சுமார் 30 ஆயிரம் காலியாக உள்ளதாக செவிலியர் சங்கங்கள் கூறுகின்றன. எக்ஸ். ரே எந்திரங்கள் பழுதாகி நீண்டகாலமாக உள்ளதாக பல இடங்களில் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
முக்கிய பணியான கார்டியாக் சர்ஜன் பணி இடங்கள் நிரப்பபடாமல் பல இடங்கள் உள்ளன. சில மருத்துவமனை களில் மருத்துவர்கள் 12 மணிநேரம் பணிசெய்ய வேண்டிய சூழல், சுகாதார வசதிகள் குறைபாடு, குடிநீர் மற்றும் கழிப்பறை பிரச்னைகள், பணியாளர் பற்றாக்குறை, உபகரண பிரச்னை என பல்வேறு நெருக்கடிகளின் பிடியில் அரசு மருத்துவமனைகள் சிக்கி தவித்து வருகின்றன. இங்கு வருவோருக்கு சிகிச்சை அளிப்பதை விட இம்மருத்துவமனைகளுக்கு உடனடி சிகிச்சை அளிப்பது அவசர தேவையாக உள்ளது. கட்டிடங்களை கட்டினால் மட்டும் போதாது. போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள், உபகரண பராமரிப்பு உள்ளிட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்தால் மட்டுமே இங்கு நிகழும் இறப்புகைளை தடுக்க முடியும். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு செல்வோரை நோயாளி என்பதற்கு பதில் மருத்துவ பயனாளி என அரசு பெயர் மாற்றம் செய்து உள்ளது. அரசு மருத்துவமனையின் அவலநிலையினை எப்போது மாற்றம் செய்யப்போகிறது?
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.

